மாட்டுவண்டியுடன் மட்டக்களப்பில் புகைபாவனைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துச்செல்லும் புகைபிடிக்கும் பாவனையினை குறைக்கும் வகையில் இளைஞர்களினாலேயே ஏற்பாடுசெய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

இன்று சர்வதேச முட்டால்கள் தினம் அனுஸ்டிக்கப்படும் நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் புகைபிடிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோரும் வகையில் சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பினால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மாட்டு வண்டியில் புகைப்பிடிப்பதற்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் பறை மேளம் முழங்க விழிப்புணர்வு ஊர்வலம் நடாத்தப்பட்டது.

இந்த ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் ஊடாக அரசடிச்சந்திவரையில் இடம்பெற்றதுடன் இந்த ஊர்வலத்தின்போது துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

சமூகத்திற்கான நண்பர்கள் அமைப்பின் தலைவர்களான ப.டினேஸ்குமார்,பி.டினேஸ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் இளைஞர் யுவதிகள் பங்குகொண்டனர்.