வாகரையில் பிரதேசசபை ஊழியர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகரை கண்டலடிக் கடற்கரையோரத்தில் வாகரைப் பிரதேச சபையில் கடமையாற்றும் கனரக வாகன சாரதியின் சடலம் செவ்வாய்க்கிழமை 08.03.2016காலை கண்டெடுக்கப்பட்டதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

வாகரைப் பிரதேச சபையில் கனரக வாகன சாரதியாகப் பணியாற்றும் கட்டுமுறிவைச் சேர்ந்த இராஜதுரை டக்ளஸ் (வயது 27) என்பவர் திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். அவரது கைப்பேசியும் தொடர்பற்ற நிலையில் இயங்காமல் இருந்துள்ளது.

உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியவுடன் வாகரைப் பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டுளள்ளனர்.எனினும், காணாமல் போனவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இவ்வேளையில் செவ்வாய்க்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கண்டலடி கடற்கரையில் சடலம் ஒன்று கிடப்பது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் அது மீட்கப்பட்டதுடன் அது டக்ளஸினுடையது என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இ;ச்சம்பவம் குறித்து தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.