பொத்துவில் கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி –ஒருவர் உயிருடன் மீட்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள ஓடாவியார் வீதி மற்றும் றிபாய் பள்ளி வீதி ஆகிய இடங்களைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பொத்துவில் பிரதேச கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

றிபாய் பள்ளி வீதியைச் சேர்ந்த சித்தீக்  றவுசான் (வயது 16), மற்றும் ஓடாவியார் வீதி கீச்சியர் சந்தியைச் சேர்ந்த சின்னலெப்பை பஹத் (வயது 13) ஆகியோரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மாலை பொத்துவில் கொட்டுக்கல் கடற் கரையோரப் பகுதியில் இவர்கள் கடற்கரைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தபோது கடலையில் வந்த மீன்களைப் பிடிக்க பஹத் என்ற சிறுவன் முனைந்துள்ளார்.

அந்நிலையில் அவரை அலை இழுத்துச் சென்று கடலுக்கடியில் கற்குழியில் அமிழ்த்தியுள்ளது.அவரைக் காப்பாற்றுவதற்காக கூட இருந்த இளைஞர்கள் இருவர் கடலில் குதித்துள்ளனர்.

எனினும், சற்று நேரத்தில் மூவரும் காணாமல் போனது பற்றி அறிவிக்கப்பட்டதும் மீனவர்களும் கடற்படையினரும் தேடுதலில் ஈடுபட்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை முஹம்மத் றிஸ்வான் (வயது 15) என்ற சிறுவன் கடலில் இருந்து மீட்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும், காணாமல்போன ஏனைய இருவரின் சடலங்களும் சனிக்கிழமை காலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களைக் தேடுவதில் கடற்படையினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.பொலிஸார், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.