ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் வீழந்து உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன் (18 மாதங்கள்) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தத்தித் தத்தி நடந்து வெளியே வந்து நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றிற்குள் குப்புற விழுந்துள்ளது.

பெற்றோர் குழந்தையை பரலுக்குள் இருந்து மீட்டு உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்தபோதும் அக்குழந்தைக்கு  ஏற்கெனவே உயிர் பிரிந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.