சீலாமுனை வாவியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை சந்தியில் உள்ள வாவிப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்போது ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

மீட்கப்பட்ட சடலம்; மண்முனை பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் ஆறாம் வட்டாரத்தினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.பிரசாந்த் (33வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் கீழ் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.