மட்டக்களப்பில் காந்தி அடிகளாரின் 68வது நினைவு தினம் அனுஸ்டிப்பு

இந்தியாவிற்கு அகிம்சா வழியில் போராடி சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அடிகளாரின் 68 வது நினைவு தினம் இன்றாகும்.

அதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட நினைவுதின நிகழ்வுகள்  இன்று (30)  சனிக்கிழமை இடம்பெற்றன.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  காந்தி பூங்காவில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வின் போது அங்கு அமைந்துள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு  மலர் மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் உபதலைவர் சி.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிதாசன் மற்றும் உறுப்பினர்கள் , சமூக பிரதிநிதிகள் உள்ளடங்களாக பொதுமக்களும்  கலந்துகொண்டிருந்தனர்.