இலங்கையின் மேற்கு பகுதியில் குழப்பமான நிலை-இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

கடந்த சில நாட்களாக உருவாகி, இலங்கையில் மழைக்கான காலநிலையை ஏற்படுத்தியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துள்ளது. அதேவேளை மற்றுமொரு வளிமண்டலக் குழப்பமானது இலங்கையின் மேற்காக உருவாகி வருகின்றது.
இதன் காரணத்தினால் இலங்கையின் பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் மழையும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் மதியம் 12.00 மணிக்குப் பின்னர் மழை காணப்படும்.

இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்று பலமானதாக வீசும். இடிமின்னல் தாக்கத்திலிருந்து எற்படும் சேதங்களைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இலங்கைக்கு அண்மையில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டலக் குழப்பம் காரணமாக இலங்கைத் தீவைச்சுற்றியுள்ள பல கடல் பிராந்தியங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது.

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு ஊடான காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றானது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் முதல் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசும். கடல் பிராந்தியங்களில் இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றானது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசுவதன் காரணத்தினால் இந்தக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

(04.12.2015 திகதி மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு)

சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் திணைக்களம்
மட்டக்களப்பு