கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தியினை கண்டிக்கிறது--தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

சித்தாண்டிக் கிராமத்தினைச் சேர்ந்த ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி என்பவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம்; மற்றும் பிள்ளையான் நித்தியானந்தம் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும்; குறிப்பிடப்பட்டு வெளியான செய்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை தொடர்புபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இது ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.மேற்குறிப்பிட்ட இரு சந்தேக நபர்களுக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் சட்சிக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்பதனை ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அண்மைக் காலங்களாக எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு எமது கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் பெயர்களையும் குற்றச் செயல்களையும் கட்சியுடன் தொடர்பு படுத்துவதும் அதனை எந்த ஆதாரமும் அற்ற நிலையில்  பத்திரிகைகளில் வெளியிடுவதனையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது கட்சி தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற போது கட்சியுடன் தொடர்பு கொண்டு உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதானது செய்தியின் உண்மைத் தன்மையினை மேலும் உறுதிப்படுத்தும்.என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இச் செய்தி வெளியிட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றது.