மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் – போக்குவரத்து பாதிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்தமட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பகுதிகளில் அனைத்து வர்த்தக நிலைங்களும் மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை என்ற காரணத்தினால் முஸ்லிம் பகுதிகளில் வழமைபோன்று கடைகள் மூடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்கள் திறந்துள்ளபோதிலும் மக்கள் செல்லாத நிலையே இருந்துவருவதுடன் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மாணவர்கள் மிக குறைந்தளவிலேயே பாடசாலைக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று,களுவாஞ்சிகுடி மற்றும் படுவான்கரை பகுதிகளில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் ஒரு சில தூர இடத்துக்கான சேவைகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன.

படுவான்கரைக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ள நிலையில் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சில சேவையில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

அத்துடன் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை மற்றும் கொக்கட்டிச்சோலை பொதுச்சந்தை என்பனவற்றில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.