இளைஞர்களது உரிமையை நாம் முழுமையாக பாதுகாப்போம் - கல்குடா தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிஸ்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
 
இளைஞர்களது உரிமையை இளைஞர்களாகிய நாம் முழுமையாக பாதுகாப்போம் என கல்குடா தொகுதி இளைஞர் பாராளுமன்ற வேட்பாளரும்,இளம் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.
 
2015 இளைஞர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
 
இலங்கை தாய் திரு நாட்டில் இம் முறை 3வது தடவையாக இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இடம் பெறுகின்றது.
 
கடந்த 28ஆம் திகதி இளைஞர் பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு நாடு பூராகவும் இடம் பெற்றதுடன்  எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் நடை பெறவுள்ளது. 
 
வெறும் வாய் வார்த்தைகளாக கொக்கரித்து கொண்டு இளைஞர்களாகிய எம்மால் இருக்க முடியாது கடந்த அரசு கனவுகளை காண்பித்து பல கோடிக் கணக்கில் நிகழ்வுகளை எமக்கு ஏற்பாடு செய்து விட்டு வெறும் 350- 450 ரூபா பெறுமதியான டிசேட்டுக்களை தந்து எம்மை கொழும்பு தலை நகருக்கு வரவழைத்து சர்வேதேசத்திற்கு படம் காட்டி எம்மை வழி அனுப்பி வைத்த வரலாற்று உண்மையை கடந்த அரசாங்க காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தில் உப தலைவராக நான் இருந்த போது கண்டு கொண்ட உண்மையாகும்.
 
கடந்த முறை இலங்கையின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இருத்து இளைஞர் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் இந்த நடை முறையை புதிய அரசு மாற்றி தொகுதிவாரி முறையை அறிமுகம் செய்துள்ளது.

யுத்ததினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் அடிக்கடி பாதிப்பு உள்ளாகும் வறிய ஏழை இளைஞர்கள் வாழும் மாவட்டமாக எமது மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.
 
இச் சந்தர்ப்பத்தில் நம்பகரமான அனைத்து மக்களினாலும் அனைத்து அரசியல் கட்சிகளினாலும் மனப்பூர்வமான ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லாட்சி நடை பெறும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் இளைஞர்களின் கனவினை நினைவாக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் எமக்காக வகுத்து யாரும் எண்ணிப்பார்த்திடாத வேலைத்திட்டங்களை நடை முறை படுத்தி வரும் எமது பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின்; வழிகாட்டுதலில் இப் பாராளுமன்ற தேர்தல் நடை பெறுகின்றது.
 
கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட எத்தனித்த நான் சற்று சிந்திக்க என்னை கடந்த கால அரசின் போக்கும் சர்வதேச நிகழ்ச்சி திட்ட வடிவமைப்புக்களும் என்னை பின்வாங்க வைத்தது.

ஏன் என்று சொன்னால் கடந்த காலங்களில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளினால் எதுவுமே செய்ய முடியவில்லை இளைஞர்களுக்காக எதனையுமே சாதித்து காட்ட வில்லை. அக்கால அரசு சிறுபான்மை மக்களினது விமர்சனங்களையும் எதிர்கொண்டது. 
 
எமது  உரிமைகளையும் பறித்தது மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஜனநாயக அரசாக அது காணப்படவில்லை.
தாரான்மை வாதம் என்ற எந்த கொள்கையினையும் அது கொண்டிருக்கவில்லை.

அனால் இம்முறை நம்பிக்கையோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியில் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள இளைஞர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் நான் போட்டியிடுகின்றேன். இதில் வெற்றி பெற கூடிய சாத்தியம் எமக்கு அதிகம் காணப்படுகின்றது.

அன்புக்குறிய இளைஞர்களே! இந்த அரசாங்கம் எமக்கு கனவு காண்பிப்பதற்கான அல்ல எமது கனவுகளை  நினைவாக்குவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை எமக்காக நடை முறைப்படுத்தி வருகின்றது நடைமுறை படுத்த காத்திருக்கின்றது. 

உங்கள் பிரதிநிதியாக நான் இருந்தால் போராட்டம் செய்து உங்களுக்கான சேவையை தொடர்வேன்.
 
சென்ற கால அரசாங்கம் போன்று இந்த அரசு செயற்படாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அவ்வாறு இளைஞர்களுக்கு பிழையான வழிகாட்டுதலை செய்ய முற்பட்டால் அந்த இளைஞர் பாராளுமன்றம் உடனடியாக களைக்கப்படும் அதற்கான திட்டங்களை இளைஞர்களாகிய நாம் வழிவகுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.