உலகில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் –டாக்டர் சுசிலா பரமகுருநாதன்

உலகில் வாழும் மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் மனநோயின் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி சுசிலா பரமகுருநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கல்லடியில் உள்ள மேற்படி அமைப்பின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.ரி.பிரான்சிஸ் தலைமையில் உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன பணிப்பாளர் நாயகம் வி.ரஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி சுசிலா பரமகுருநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாத்தடை இயக்க வைத்திய அதிகாரி திருமதி மேகலா ரவிச்சந்திரன், கோட்டைமுனை மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி செல்வி ரி.கலைச்செல்வி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன், மட்டக்களப்பு மேல்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.ஆர்.அமான், மட்டக்களப்பு மனநல ஆற்றுப்படுத்தல் கல்லூரியின் பணிப்பாளர் எம்.நேசராஜ், கல்லடி வேலூர் கிராமசேவை உத்தியோகத்தர் ரி.சிவலிங்கம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு அங்கோடை மனநல வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் எம் கணேசன் தலைமையில் நடாத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களையும் பெற்றவர்களுக்கு பணப்பரிசும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் வறிய நிலையில் உள்ள ஒருவருக்கு வாழ்வாதார மேம்பாட்டுக்காக துவிச்சக்கர வண்டி ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அனுஸ்டிக்கப்படும் தினங்களில் மிகச்சிறந்த தினமாக உளநல தினம் கருதப்படுகின்றது.உளநலத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தேடிச்சென்று உதவி வழங்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நோயினால் பாதிக்கப்படும் ஒருவர் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைபெற்றுக்கொள்ளமுடியும்.ஆனால் உளநலத்தினால் பாதிக்கப்படுபவர்கள் அவ்வாறு சென்று சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்வதில்லை.அவ்வாறானவர்களை நாங்கள் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கவேண்டும்.

இன்று சர்வதேச ரீதியில் இந்த உளநல தினம் முக்கியத்துவம் பெறுகின்றது.ஒரு சமூகத்தில் வளர்ந்தவர்கள் மத்தியில் நான்கில் ஒருவருக்கு உளநல பாதிப்பு உள்ளது.இதனை உலக சுகாதார ஸ்தாபனமும் உறுதிப்படுத்தியுள்ளது.நான்கில் ஒரு பகுதியினர் இவ்வாறு உளநலப்பாதிப்புகளை கொண்டுள்ளனர்.

இயற்கை மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 4.5மில்லியன் மக்கள் உளநல வைத்தியசாலைகளில் உளநல சிகிச்சைகளைப்பெற்றுவருகின்றனர். இந்தவகையில் உளநல மேம்பாடு முக்கியமாக கருதப்படுகின்றது.

இந்த உளநலத்தின் பொது குறிக்கோளாக சமூகத்தில் உள்ள தனிப்பட்டவர்கள் அனைவருமே தமது உளநல மேம்பாட்டை மேம்படுத்தவேண்டிய கடமைப்பாடு உள்ளது.

இன்று இலங்கை உட்படு பல்வேறு நாடுகளில் இடம்பெறும் குற்றச்செயல்களின் அடிப்படையை பார்க்கும்போது அதன் பின்னியாகவுள்ளது அவர்களின் உளநல பாதிப்பாக இருக்கும்..