எல்லைப் புறக் கிராமங்களில் தொல்லையின்றி வாழ தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் இன்றியமையாதது –சிறிநேசன் எம்.பி.

எல்லைப் புறக் கிராமங்களில் தொல்லையின்றி வாழ தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் இன்றியமையாதது இந்த யதார்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் தெரிவித்தார்.


கடந்த 30 வருடகால யுத்தத்தினால் ஊரை விட்டு சிதைந்து சின்னாபின்னமாகி வாழ்பவர்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான மர நடுகைப் பிரார்த்தனை நிகழ்வு மட்டக்களப்பு, ஏறாவூர்-1,  ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஞாயிறன்று இடம்பெற்றது.

மனித உரிகைள் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அரியமலர் செல்வராசாவின் ஏற்பாட்டில் ஏறாவூர் 1 ஆறுமுகத்தான்குடியிருப்பு மாரியம்மன் கோயில் வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிறிநேசன் கூறியதாவது, தமிழ் பேசும் மக்கள் என்று குறிப்பிடுகின்ற போது அது தமிழர்களையும் முஸ்லிம்களையும்தான் குறிக்கும்.

“மட்டக்களப்பு மான்மியம்” என்கின்ற வரலாற்று நூலைப் புரட்டிப் பார்த்தால் அதிலே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கின்ற தாய் வழி உறவு எவ்வளவு பலமும் மகிமையும் நிறைந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முக்குவர்களுக்கும் திமிலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறைத் தீர்த்து வைப்பதற்கு பட்டாணியர்கள் எனப்படுகின்ற தெற்காசிய முஸ்லிம் சமூகத்தினர் முக்குவர்களுக்கு உதவி புரிந்து திமிலர்களின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றினர்.

அதன் பின்னர் தமக்கு உதவி புரிந்தமைக்காக முக்குவர் குலத்து மாதர்களை பட்டாணியர்களுக்கு மணம் முடிக்கக் கொடுத்து வளமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

ஆகையினால் இந்தப் பிரதேசத்து முஸ்லிம்களின் தாய்வழி தமிழ் மாதர்கள் என்பதை மனதில் வைத்து சமூகக் கலவரங்களுக்குத் தூபமிட நினைப்போரை நாம் விரட்டியடிக்க வேண்டும்.

ஏறாவூர் மாரியம்மன் கோயிலை நிர்மாணிப்பதிலே ஏறாவூர் முஸ்லிம்கள் தங்களாலான பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்ற வரலாற்றைப் புரிந்து கொண்டு இனக் கலவரங்களுக்கு வழி விடாமல் இனங்கள் இணைந்த அமைதி வாழ்வுக்கும் அபிவிருத்திக்கும் நாம் வழி கண்டாக வேண்டும்.
இங்கு மட்டுமல்ல மட்டக்களப்பின் படுவான்கரையிலும் தமிழ் முஸ்லிம் உறவு தாய்வழிப் பாசமாக நின்று நிலைத்தது.

ஆயினும், துரதிருஷ்டவசமாக அரசியல் தேவைக்காக இனவாதம், மதவாதம் பிரதேச வாதம், சாதி வாதம் என்பவற்றைத் தூண்டி கீழ்த்தரமான அரசியல் செய்ததன் காரணமாக இன உறவு கசப்படைந்தது.

தமிழரசுக்கட்சி தோன்றியபோது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்கள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து தந்தை செல்வாவுடன் பக்கபலமாக நின்றுதான் சிறுபான்மையினரின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.

அப்போதெல்லாம் தமிழ் முஸ்லிம் உறவென்பது தாய்வழி தொப்புள் கொடி உறவாக, உயிரோட்டமாக இருந்தது.

ஆனால். அதற்குப் பின்னர் வந்த சுய நல அரசியல்வாதிகளால் தமிழ் முஸ்லிம் உறவு என்பது கன கச்சிதமாக திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது.

அதில் சிக்கிக் கொண்டதால்தான் நாம் அனைத்தையும் இழந்தோம்” என்றார்.
இந்நிகழ்வு ஆறுமுகத்தான்குடியிருப்புக் கிராமத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக இடம்பெயர்ந்து தற்போது லண்டனில் வசிக்கும் வேலப்பன் முரளீதரனின் நிதி அனுசரணையோடு இடம்பெற்றது.

கலவரங்களினால் இடம்பெயர்ந்து உயிரழந்தோரின் நினைவாக பிரார்த்தனைகள் இடம்பெற்று கோயில் வளாகத்தில் 75 பசுமரக் கன்றுகளும் நாட்டப்பட்டன.