மட்டக்களப்பில் இன அழிப்பிற்கு எதிராக குரல் கொடுத்த அமெரிக்க துறவியின் 25வது ஆண்டு நினைவு தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்த நிலையில் கொல்லப்பட்ட ஜேசு சபை துறவியான அருட்தந்தை எப்.ஆர்.ஹேர்பட்டின் 25வது நினைவு தினம் இன்று பாடசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று காலை நினைவு தினத்தினை குறிக்கும் வகையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டுத்திருப்பலியில் அருட்தந்தையர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அருட்தந்தை எப்.ஆர்.ஹேர்பட் மற்றும் அவருடன் சென்றபோது கடத்தப்பட்டு காணமல்போன பிரான்சிஸ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மற்றும் ஒளியேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன், அலிசாகிர் மௌலானா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள்,மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சிக்காக அமெரிக்காவினை சேர்ந்த ஜேசு சபை துறவியான அருட்தந்தை எப்.ஆர்.ஹேர்பட் அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிவந்ததுடன் 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மீறல்களுக்கு எதிராகவும்போராடிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை சர்வதேசத்திற்கு கொண்டு சென்ற முதல் பெருமையினையும் இவர் பெற்றுக்கொண்டார்.

இவர் 90ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி ஏறாவூர் ஊடாக சென்றுகொண்டிருக்கும்போது கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.