மட்டக்களப்பு மாவட்டத்தில் 1200 வீடுகளை அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலத்தில் பல பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதி என்பதனால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்ற நிலையை ஏற்படுத்தவதற்கான விசேட திட்டத்தின உருவாக்கவுள்ளதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.


எனது தனிப்பட்ட திட்டம் ஊடாகவே இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன் இதற்கு அனைத்து சமூகமும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாத 1200பேருக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 11.30மணியளவில் களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் 100நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வீடுகள் அற்றோர் இல்லாத தேசத்தினை கட்டியெழுப்பும் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதன்கீழ் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள களுவாஞ்சிகுடி, போரதீவுப்பற்று பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் உதவி பொதுமுகாமையாளர் லலித் எதிரிசிங்க,களுவாஞ்சிகுடி உதவி பிரதேச செயலாளர் ,பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி வி.சிவப்பிரியா,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன்,திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.குணரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1200 வீடுகளை அமைப்பதற்காக முதல் கட்டமாக 21மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

இதன்கீழ் முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி, போரதீவுப்பற்று பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் வீடுகள் அற்ற 300 குடும்பங்களுக்கான முதல் கட்ட நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பட்டிருப்பு தொகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை மட்டக்களப்பு தொகுதிக்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.