மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி பி .எஸ் .எம் சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய நிதியுதவியில் 685.38 மில்லியன் ரூபா நன்கொடையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.

இக் கலந்துரையாடலில்,  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  ஆர் .நெடுஞ்செழியன், 14 பிரதேச செயலக பிரதேச  செயலாளர்கள்,  கல்வி வலய பணிப்பாளர்கள், உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களான யுனிசெப், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், சர்வதேச நிதி நிறுவனம், உலக விவசாய நிறுவனம், உலக தொழிலாளர் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் இத் திட்டங்களை நடைமுறைபபடுத்துகின்றன.

இவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், இன் நிறுவனங்களின் செயற்பாட்டுத்திட்டங்கள் தற்போதைய நிலை எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் துறைசார்ந்த மாவட்ட அபிவிருத்தித்திட்டமானது (நுரு- ளுனுனுP)  2014ஆம் ஆண்டு முதல் 17ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதில், கல்வி அபிவிருத்தி, தொழில்துறை அபிவிருத்தி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கரையோரம் பேணல், விவசாயத்துறை, மீன்பிடித்துறை, சிறுவர் அபிவிருத்தி என பல்வேறு பட்ட துறைகளிலும் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட 5 ஆண்டு திட்டத்திற்கமைவாக துறை ரீதியாக மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளும் உள்ளடக்கப்பட்ட இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படடு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.