போரதீவுபற்று பிரதேச செயலகத்தில் சிறுபோக வேளான்மை செய்கைக்கான ஆரம்பக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் விவசாயிகளை அறிவுறுத்தும் ஆரம்பக்கூட்டம் இன்று வியாழக்கிழமை வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,நீர்பாசண திணைக்கள அதிகாரிகள்,கமநல திணைக்கள அதிகாரிகள்,வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் உட்பட திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர் காணிகளில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.தற்போது பெரும்போக அறுவடை பூர்த்தியடைந்துள்ள நிலையில் சிறுபோக விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அவர்களுக்கான நீர் வசதிகளைப்பெற்றுகொடுத்தல் மற்றும் விதை நெல்களைப்பெற்றுகொடுத்தல், உர மானியங்களை வழங்குதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்கள் அரைவாசியை மட்டுமே வங்கிகளுக்கு செலுத்தவேண்டும் எனவும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரனால் தெரிவிக்கப்பட்டது.

இம்முறை போரதீவுப்பற்று,பட்டிப்பளை,வவுணதீவு,செங்கலடி,கிரான்,வாகரை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள நீர்ப்பாய்ச்சல் குளங்களைப்பயண்படுத்தி இந்த சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.