பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் பணிகளை இடைநிறுத்தாமல் தொடர்ந்தும் மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஏனைய பகுதிகளில் இருந்துவரும் உறவுகளை அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த,மீரியபொத்த பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்துகொண்டு திரும்பிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,பிரசன்னா இந்திரகுமார், ஞா.கிருஸ்ணபிள்ளை, கலையரன்,மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம்,
நாம் அங்கு முதலில் சம்பவம் இடம்பெற்ற இடத்தினைச் சென்று பார்வையிட்டோம். ஆந்த இடத்தினைப் பார்ப்பததற்கு பொது மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாம் எமது சிறப்புரிமை மூலம் அங்கு சென்று பார்வையிட்டோம் அங்கு இயந்திரங்கள் மூலம் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
200க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அங்கு அப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நாம் நின்ற சந்தர்ப்பங்களில் எவ்வித புதையுண்ட உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் நின்ற இடத்திற்குச் சற்றுத் தொலைவில் பொதுமக்கள் நின்று பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் திரும்பி வரும் வேளையில் தங்களை அவ்விடத்திற்கு அனுமதிக்கின்றார்கள் இல்லையென பொதுமக்கள் எங்களிடம் முறையிட்டார்கள். இது சம்மந்தமாக நாம் மேலிடத்தில் கதைப்பதாக கூறிகொண்டு அங்கிருந்து வந்து சில முகாம்களுக்குச் சென்று பாதிப்புற்ற மக்களைப் பார்வையிட்டோம்.
நாங்கள் அங்கு சென்றதும் அந்த மக்கள் கூறிய செய்தி என்னவென்றால் வடக்கு கிழக்கில் இருந்து எமது உறவுகள் எம்மை வந்து பார்த்து ஆறுதல் கூறும் போது மிகவுதம் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்ற செய்தியை அவர்கள் எமக்குத் தெரிவித்தார்கள். அங்குள்ள குறைபாடுகள் பற்றி அவர்கள் கூறினார்கள். தாங்கள் வெளியே செல்ல முடியாமல் இருக்கின்றது வெளியே இருக்கின்றவர்கள் உள்ளே வந்து பார்க்க முடியாமல் இருக்கின்றது குளிப்பது பொன்ற உள்ளக வசதிகள் குறைவாக இருக்கின்றது என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த உள்ளக வசதி இல்லாமை தொடர்பாக நாம் அங்கு அப்போது அமைக்கப்பட்டுள்ள நிர்வாகத்துடன் கலந்துரையாடி அவ்விடயங்களுக்கான நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து ஏனைய முகாம்களுக்குச் சென்றோம். செல்லும் வழியில் பதுளை மமாவட்ட அரசாங்க அதிபர் அவர்களையும் நாங்கள் சந்தித்து மக்கள கூறிய குறைபாடுகள் பற்றியும் எடுத்துச் சொன்னோம்.
பொதுவாக பொதுமக்கள் வந்து தங்கள் உறவினர்களை பார்வையிடுவதற்கு ஏதாவதொரு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம். அங்கு சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதும் எமக்குத் தெரியும் ஆனால் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மனிதாபிமான ரீதியில் செயற்பட வேண்டும் எனவும் அவருக்கு வலியுறுத்தினோம்.
ஏங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி ஐந்து நிலையங்களிலே மக்கள் இருக்கின்றார்கள். பூணகலை தமிழ மகா வித்தியாலயம், பூணகலை சிங்கள மகா வித்தியாலயம், பூணகலை தமிழ் மகா வித்தியாலயம் இல 02, கொஸ்லந்தை கணேசா வித்தியாலம், கல்துமுள்ள தமிழ் மகா வித்தியாலம் ஆகிய ஐந்து இடங்களில் மக்கள் இருக்கின்றார்கள்.
இதில் பாதிப்புக்குள்ளான மீரியபெத்த தோட்டத்தில் இருந்து சென்ற மக்கள் பூணகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இருக்கின்றார்கள். பொதுவாக நிவாரணங்களைப் பொருத்த மட்டில் அரச அதிபருடைய தகவலலின் படி போதுமான அளவிற்கு நிவாரணம் இருப்பதாகவும் அதனை விநியோகிப்பதற்கான நடைமுறைச் சிக்கல்கள் பல இருப்பதாகவும் அத்துடன் நாம் விடயம் தொடர்பாகவும் நடிவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நூங்கள் மக்களிடம் இருந்து அறிந்த தகவல்களின் படி 40 தொடக்கம் 60 பேர்வரை காணவில்லை என்றும் திட்டவட்டமாக கூறமுடியாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அனர்த்தத்தின் காரணமாக 10 பிள்ளைகள் தாய் தகப்பன் இருவரையும் இழந்திருக்கின்றார்கள், 68 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை இழந்திருக்கின்றார்கள். இந்த பிரதேசம் கிட்டத்தட்ட 40 அடி வரை மண்ணால் மூடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. எனவே இவ்வளவு தூரம் இருக்கும் மண்ணை எவ்வாறு அகழ்ந்து எடுப்பது, அதில் புதையுண்டுள்ள உடலங்களை கண்டுபிடிப்பது தொடர்பாக நிபுனர்கள் தான் அதை தீர்மானிக்க வேண்டும்.
எங்களைப் பொருத்த மட்டில் மலேசிய விமானத்தினை இன்னும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை இடம்பெறுகின்றது அது போலவே இந்த தேடுதல் நடவடிக்கையையும் கைவிடக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.
இந்த மலையக மக்கள் தொடர்பில் இந்த அனர்த்தத்தில் இருந்து அவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது இப்பொழுது நாங்கள் விடை காண வேண்டிய விடயமாக இருக்கின்றது. நாங்கள் செல்லுகின்ற போது நிவாரணங்களை கொண்டு செல்லாமல் இருந்ததற்கு காரணம் அங்கு அவர்களின் தேவை என்னவாக இருக்கின்றது என்பது பற்றி அறிந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே.
நாங்கள் அறிந்ததன் படி 2005ம் ஆண்டு இதே மீரியபெத்தே தோட்டப்பகுதிக்கு ஒரு எச்சரிக்கை விடப்பட்டிருந்து ஆனால் அது வெறுமனே எச்சரிக்கையாகவே இருந்தது அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆனால் அதே வரும் அங்கு ஒரு மண்சரிவு இடம்பெற்றது பின்னர் அங்கு அவர்களை மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 2007ம் ஆண்டு மண்சரிவு சம்மந்தமான மீணடும் ஒரு எச்சரிக்கை விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. எனவே இம்முறை வெறுமனே எச்சரிக்கையோடு மாத்திரம் அரச நிர்வாகம் நிறுத்திக் கொள்ளாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாம் விசாரித்த மட்டில் இரண்டு நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடப்பட்டதாக செய்திகளிலே தெரிவித்திருக்கின்றார்கள் ஆனால் அவ்வாறான எதுவித எச்சரிக்கைகளும் எமக்கு விடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தார்கள். எனவே இந்த விடயத்தில் குறித்த நிர்வாகங்கள் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
நாம் ஏற்கனே சொன்னதன் படி மீரியபெத்தே எஸ்கே பிரிவில் இருநடதவர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு சில நடைமுறைகளை கையாண்டார்கள். தேசிய வீடமைப்பு அதிகார சபையும் தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியம் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு ஏற்பாடு இருந்தது இதில் தோட்ட மனதி வள அபிவிருத்தி றிதியத்தின் மீது மக்கள் பெரும் அதிருப்தியை வெளிக்காட்டினார்கள். ஏனெனிர் 64 வீடுகளில் 22 வீடுகள் தான் கட்டிக் கொடுத்திருக்கின்றார்கள் அதுவும் முழுமைப்படுத்தப்படவில்லை.
எனவே இந்த விடயத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டும் அந்த இடங்களில் வீடுகள் அமைக்க வேண்டும் அந்த வீடுகள் உறுதியாகவும் மக்கள் வாழக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இந்த மக்களை இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக லயத்தில் வாழ வைத்திருக்கின்றோம் அதாவது லயத்தினை குதிரைக் கொட்டில் என்றே கூறுவார்கள் அதிலேதான் அவர்களை நாம் இத்தனை காலமம் வாழ வைத்திருக்கின்றோம். அவர்கள் திரும்ப திரும்ப எம்மிடம் தெரிவித்தது தோட்ட மனிதவள நிதியத்தினை இதில் சம்மந்தப்படுத்த படுத்துவது பற்றி அரசாங்கம் மீளவும் யொசிக்க வேண்டும். அவர்களின் விருப்பத்தின் படி தேசிய அபிவிருத்தி அதிகாரசபையிடம் மொத்த பொறுப்பையும் கொடுப்பதைத்தான் அவர்கள் விரும்புகின்றார்கள்.
இந்த அனர்த்தம் என்பது சாதாரணமாக ஒரு மனித நேயத்திற்கு அப்பால் நாங்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு கூடுதலான ஒரு ஈடுபாட்டடைக் கொடுத்திருக்கின்றது. அவர்கள் எமது உறவுகள். எமது தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெறுவதற்கு காரணமே தோட்ட தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம். 1949ம் ஆண்டு 03ம் இலக்க இந்திய பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அன்று குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர் மக்களின் குடியுரிமையைப் பாதுகாப்பதற்காகதான் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து தந்தை செல்வா அவர்களால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தோற்றம் பெற்றது.
இந்த மலையக மக்களைப் பொருத்த மட்டில் எங்களது ஈடுபாடு அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் மிகவும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வரலாறு அனைவருக்கும் தெரியும் எமது தமிழ் அரசு கட்சி அரசாங்கத்துடன் ஏற்படுத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் நாங்கள் மலையக மக்களின் குடியுரிமையை வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இவ்வாறான அரசியல் தொடர்பான பேணுகைகளை நாம் மலையகத்துடன் வைத்திருக்கின்றோம்.இப்பொழுது இந்த அனர்த்தம் தொடர்பான விடயம் எமது உறவுகளை மீண்டும் பேணுவதற்கு வழிவகுத்திருக்கின்றது.
இந்த அனர்த்தம் தொடர்பாக நாம் மக்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியானது பாதிப்புக்குள்ளான மக்கள் தொடர்பில் அவர்களின் எதிர்கால மேம்பாடு தொடர்பாக நாங்கள் நிதியுதவிகளைச் செய்து அதனை அதை முறைப்படி ஒழுங்குபடுத்தி நிரந்தரமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்வதற்கு ஏற்ற விதத்தில் அரசையும் அதன் சம்மந்தப்பட்ட செயற்பாடுகளையும் ஊக்குவிப்பதுதான் எமது செயற்பாடாக இருக்கும்.
நாம் சென்று பார்வையிட்ட முகாம்களில் பூனாகலை தமிழ் மாகா வித்தியாலயத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வந்து அமர்த்தியிருக்கின்றார்கள் ஏனைய இடங்களில் அனர்த்தம் இடம்பெறும் அபாயம் இருக்கும் இடங்கள் என அறியப்பட்ட இடங்களில் வசித்த மக்களை கொண்டு வந்தே இருத்தியிருக்கின்றார்கள் அவர்கள் அங்கு இருக்கும் போது இவர்களுக்கு நிவாரணம் கொடுக்கப்படும் போது அவர்கள் சும்மா இருந்து நிவாரணங்கள் பெறுவதாக பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் நிவாரணம் வழங்குவபவர்களால் அவ்வாறான கருத்துகள் மறைமுகமாக திணிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவர்களுக்கு நாம் பாதிப்புக்குள்ளாகாமல் ஏன் சும்மா இங்கு இருந்து நிவாரணத்தினைப் பெறுகின்றோம் என்ற எண்ணம் தோன்றுகின்றது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய மனிதாபிமான விடயம் அவர்களை முகாம்களில் கூட்டிவந்து வைத்துவிட்டு நிவாரணம் பெறுவதற்காகவர்கள் இருப்பதாக தெரியப்படுத்தவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.