கிழக்கு மாகாணத்துக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வீரர்கள் மட்டக்களப்பு வருகை

கொழும்பில் நடைபெற்றுவரும் இலங்கையின் 40வது தேசிய விளையாட்டு விழாவில் கபடி அணி தங்கப்பதக்கத்தினையும் கூடைப்பந்தாட்ட அணி வெண்கலப்பதக்கத்தினையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இன்று கொழும்பின் விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் நடைபெற்ற கபடிப்போட்டியிலும் ஹென்றி பேதிரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப்போட்டியிலும் இந்த சாதனையினை படைத்துள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் பூபாலராஜா தெரிவித்தார்.

விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்டுவரும் இந்த தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கபடி மற்றும் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் மட்டக்கள்பபு அணி பங்குபற்றியது.

இதேவேளை கிழக்கு மாகாணத்துக்கு தேசிய ரீதியில் பெருமைசேர்த்த அணியினர் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பினை வந்தடைந்தனர்.

இவர்களை கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மட்டும் புகையிர நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.

இதன்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் தவராஜாவும் இணைந்திருந்தார்.

தேசிய ரீதியான மிக முக்கியத்துவமிக்க விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்தவர்களை வரவேற்பளிப்பதற்கு வேறு யாரும் முன்வராமை கவலைக்குரியதாகவே உள்ளது.