வாவிக்கரை வீதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க புளியந்தீவு,வாவிக்கரை வீதி அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரமப்மானது.

நூறு வருடங்களுக்கு முற்பட்ட காலத்தினையுடைய இந்த ஆலயமானது சித்தர்கள் வழிபட்;ட ஆலயமாகவும் கருதப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முருக வழிபாட்டுமுறைகளுக்கு அமைவாகவும் தமிழர்களின் பூஜைமுறைகளுக்கு அமைவாகவும் இந்த ஆலயத்தின் உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன.

இன்று காலை விநாயகர் வழிபாடுகளுடன் மஹோற்சவ கிரிகைள் கிரியா கலாநிதி சாதக நாதசாகரம் சிவஸ்ரீ க.கு.லோகநாதக்குருக்களினால் நடத்தப்பட்;டது.

விசேட ஹோம பூஜை நடத்தப்பட்டு கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டப பூஜை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் கொடியேற்ற கிரியைகள் நடத்தப்பட்டன.

கிரியைகளை தொடர்ந்து நண்பகல் 12.00மணியளவில் நாத,வேத,பாராயணம்,அடியார்களின் ஆரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பத்துக்கு விசேட அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா நடைபெற்றதுடன் வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக ஆரம்பமானது.

இன்று காலை நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை காண்பதற்காக மட்டக்களப்புக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

எதிர்வரும் 09ஆம் திகதி காலை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 10ஆம் திகதி வாவிக்கரை தனில் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.