தற்காலிக இடமாற்றம் பெற்றோர் தமது வலயத்திற்குத்திரும்பாவிட்டால் சம்பளம் இடைநிறுத்தம் - கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர்.

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திலிருந்து வேறு வலயங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் தமது வலயத்தில் கடமையேற்காது விடின் அவர்களது சம்பளங்கள் இடைநிறுத்தப்படும் என வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீ கிருஸ்ணராஜா தெரிவித்தார்.


தற்காலிக இடமாற்றங்களைப் பெற்ற 27பேர் வேறு வலயங்களில் கடமைகளில் உள்ளனர். இவர்களின் இடமாற்றங்கள் இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இவர்களுக்காக சம்பளங்களை கல்குடா வலயம் வழங்கி வருகிறது. ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்ற நிலையில் தொடர்ந்தும் இவர்கள் வேறு வலயங்களில் கடமையாற்ற முடியாது.

எனவே இவர்கள் 27பேரும் எதிர்வரும் புதிய வருடத்தில் தமது கடமைகளை கல்குடா வலயத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலயக்கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள், மட்டக்களப்பு வலயம் - 9, சம்மாந்துறை-3, கல்முனை-8, பட்டிருப்பு -5, அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு மத்தி ஆகியவற்றில் தலா ஒருவர் என்ற எண்ணிக்கையில் கடமையிலுள்ளனர்.

கல்குடா வலயத்திலுள்ள மாணவர்களின் நலன்கருதி இந்த ஆசிரியர்கள் 27 பேரும் தமது வலயங்களுக்கு கடமைக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.