கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வாகனம் மோதி ஒருவர் பலி-தேத்தாதீவில் சம்பவம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாதீவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வாகனம் மோதி வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாத்தீவு பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் தேத்தாத்தீவு பிரதான வீதியை சேர்ந்த சேர்ந்த எஸ்.ரவிராஜ் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எம்.மன்சூர் என்பவரின்  வாகனமே குறித்த வயோதிபர்; மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து சம்பவித்தது.

குறித்த வயோதிபர் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குறித்த வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.