கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் கல்வி மற்றும் அபிவிருத்தியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் பங்களிப்பினை அதிகரித்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு அரசடியிலுள்ள பீட வளாகத்தில் இன்று திங்கட்கிழமை பகல் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பீடாதிபதி டாக்டர் ரி.சுந்தரேசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் துறைத்தலைவர்களான டாக்டர் ரி.கருணாகரன், டாக்டர் அஞ்சலா அருள்பிரகாசம், அருட்சகோதரி கலாநிதி எஸ்.ஜோசேபா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் 30க்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், முழுமையான ஒத்துழைப்பினையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, சௌக்கிய பராமரிப்பு பீடத்தின்கல்விச் செயற்பாடுகளின் மேம்பாடும், அபிவிருத்தியும் மேம்படுவதற்கு வைத்திய நிபுணர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் என்ற வகையில் வைத்திய நிபுணர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இது போன்ற கலந்துரையாடல்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையேனும் தொடர்ச்சியாக நடைபெறுவது பீடத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவமானதாக அமையும் எனத் தெரிவித்தார்.
அதே நேரம், சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் பீடாதிபதி டாக்டர் ரி.சுந்தரேசன் கருத்துத் தெரிவிக்கையில், கிழக்கின் மருத்துவத்துறையினை மேம்படுத்துவதில் உபவேந்தர் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.