வெல்லாவெளி பிரதேசத்தில் 22 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் 22ஆயிரம் ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மைச்செய்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் ஆராயும் கூட்டங்கள் பிரதேச செயலகங்கள் தோறும் நடத்தப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு நெல் உற்பத்தியையும் விவசாய நிலங்களையும் கொண்டுள்ள வெல்லாவெளி பிரதேசத்தில் இம்முறை பெரும்போக வேளான்மை செய்கை தொடர்பில் ஆராயும் கூட்டம் வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக விவசாய உதவிப்பணிப்பாளர் உகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாஸ்கரன்,மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி பணிப்பாளர் சிவலிங்கம்,விவசாய திணைக்கள உதவி பணிப்பாளர் ஹரிகரன்,போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,விவசாய உத்தியோகத்தர்கள்,விவசாய அமைப்புகள் இதில் கலந்துகொண்டன.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் நவகிரி நீர்பாசன திட்டம் மற்றும் தும்பங்கேணி ஆகிய நீர்பாசன திட்டங்கள் ஊடாக இப்பகுதியில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால வெள்ள அனர்த்தங்களினால் மிகவும் பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதியாகவும் இருந்துவருகின்றது.