ஜுன் மாதம் முதலாம் திகதி அதிகாலை குருக்கள்மடம் செல்லக்கதிர்காம ஆலயம் மற்றும் மாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு சுமார் 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.
எனினும் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் ஜி.பி.எஸ்.கண்டறியும் இயந்திரம் மூலமும் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் கொள்ளையிடப்பட்ட தினத்தில் கொள்ளை நடந்த பகுதிகளில் இருந்து வெளிச்சென்ற உள்வந்த அழைப்புகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது யாழ் கோப்பாயில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினை இயக்கிவரும் அதன் பணிப்பாளரும் கைதடியினை சேர்ந்த ஒருவரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவினை சேர்ந்த ஒருவருமாக நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகுதி தங்கம் மற்றும் வெள்ளித்தகடுகள் கைப்பற்றப்பட்டதுடன் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவரில் ஒருவரிடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் பதாகைகள் மற்றும் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி நூர்தீன் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.