மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவரும் 'மகுடம்' சஞ்சிகையின் ஆண்டு மலர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் சிறப்பு இதழாக வெளியிட்டுவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், கிழக்கிலங்கை சிற்றிதழ்கள் ஒன்றியத்தின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி கலாமதி பத்மராஜா கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சீ.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் க.மகேசன் கலந்துகொண்டார்.
ஈழத்து இலக்கியப் பரப்பில் மகுடத்தின் வளர்ச்சிக்கும் வருகைக்கும் வளம் சேர்க்கும் வகையில் கிழக்கிலங்கை சிற்றிதழ்கள் சங்கம் விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக சஞ்சிகையின் ஆசிரியர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.
இதன் முதல் பிரதியை மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவரும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பொருளாளருமான வி.ரஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
வெளியீட்டு உரையை மலைமுரசு பிரதம ஆசிரியர் ஸ்ரீ.ஞானேஸ்வரனும் விமர்சன உரையை மண்முனை மேற்கு- வவுணதீவு பிரதேச செயலாளர் வெ.தவராஜாவும் ஈழத்து சிற்றிலக்கிய வரலாற்றில் மட்டக்களப்பும் மகுடமும் என்ற தலைப்பில் சிறப்பு உரையை முன்னாள் வடகிழக்கு மாகாண உதவி கலாசார பணிப்பாளர் செ.எதிர்மன்னசிங்கமும் நிகழ்த்தினர்.
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் ஆண்டு நிறைவையொட்டி சிறப்பு இதழாக இது வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.