கொக்கட்டிச்சோலை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் உட்பட ஏழு பேர் கைது

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினை சேர்ந்த நால்வர் உட்பட ஏழு பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை தாந்தாமலை பிரசேத்துக்குட்பட்ட கொல்லர்மலை பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் எனவும் ஏனையவர்களில் நால்வர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது தாயின் தாயார் புதைத்து வைத்த தங்க நகைகளை மீட்கவே தாங்கள் இப்பகுதிக்கு வந்ததாக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணையின்போது தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இதில் சந்தேகம் நிலவுவதாகவும் அதன் காரணமாக கைதுசெய்யப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.