மட்டக்களப்பு மாவட்ட மனைப் பகுப்பாய்வுத் திட்ட தரவுகளை கணணி மயப்படுத்தல் தொடர்பான பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்சின் பணிப்புரையின் பேரில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (யு.என்.டி.பி) அனுசரணையில் இத்திட்டம் நடைபெறுகிறது.
இன்றைய செயலமர்வினை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையேற்று நடத்தினார்.
வளவாளராக வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பிரிவின் கணணித்துறைக்கான விரிவுரையாளர் ஏ.ருக்சான் கலந்து கொண்டு இச் செயலமர்வினை நத்தினார்.
உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களாக ஏ.சுதாகரன், ஏ.சுதர்சன் ஆகியோரும் விளக்கங்களை வழங்கினர்.
இச் செயலமர்வில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கள உத்தியேகத்தர்களும் பங்கு கொண்டனர்.
மாவட்ட மனைப் பகுப்பாய்வுத்திட்டத்தின் ஊடாக மாவட்டத்தின் சகல தரவுகளும் கணணி மயப்படுத்தப்பட்டு, உள்ளீடு செய்யப்படுவதன் மூலம், எதிர்காலத்தில் திட்டமிடல், அபிவிருத்தி வேலைகள், மற்றும் ஏனைய கல்வி, பொருளாதார மேம்பாடு, வளப்பங்கீடு குறித்த திட்டங்களுக்கான தகவல்கள் பெறுவது தொடர்பிலான சிரமங்கள் தவிர்க்கப்படுவதுடன், திட்டத்தயாரிப்புகளும் இலகுப்படுத்தப்படும் என மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இப் பகுப்பாய்வில், பிரதேச, கிராம சேவையாளர் பிரிவு, குடும்பங்கள் ரீதியாக சகல விபரங்களும், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள், தொழில், கல்வித்தகமை, தங்கிவாழ்வோர், வேலைவாய்ப்புகள், வருமானம், வாழ்வாதாரம், விசேட திறமையுடையோர் என அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன.