போரதீவுப்பகுதியில் காணாமல்போனவரின் மண்டையோடு,உடை மீட்பு

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போரதீவுப்பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் காணால் போன ஒருவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எச்சத்தில் காணப்பட்ட உடைகளைக்கொண்டு காணாமல்போனவர் கோவில்போரதீவை சேர்ந்த தங்கராசா பேரானந்தம்(73வயது)என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போனவரின் மனைவியே குறித்த உடைகளைக்கொண்டு காணாமல்போனவரை அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணமல்போனவர் இப்பிரதேசத்தின் பிறப்பு இறப்பு பதிவாளராகவும் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட எச்சத்தில் உள்ள மண்டையோடு வெடித்துள்ளதன் காரணமாக அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் மண்டையோட்டினை பரிசோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியொன்றினை கண்டெடுத்துள்ள அப்பிரதேச சிறுவன் ஒருவன் அதனை பாவித்துக்கொண்டிருந்தபோது குறித்த துவிச்சக்கரவண்டியை கண்ணுற்ற காணாமல்போனவரின் குடும்பத்தினர் அது தொடர்பில் வினவியபோது துவிச்சக்கர வண்டி கிடந்த இடத்தினை காட்டியுள்ளான்.

இதன்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குளப்பகுதியில் இருந்து இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை அப்பகுதிக்கு சென்ற களுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் ரத்னாயக்க இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டார்.