(சரண்)
இரவு முழுக்க வீடு வளவு காவல் பண்ணி பேய்க்கு கழிப்புச் சடங்கு செய்தவர் வீட்டிற்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த இளையதம்பி விமலநாதன் (வயது 35) என்று உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இவர் வீட்டினுள் இறந்து கிடப்பதாக ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு நீதிவானின் உத்தரவுக்கமைய ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எச்.பி.கே.விக்ரமநாயக்க, பொலிஸ் சார்ஜன்ற் ஏ.ஹஸன், பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் ஆகியோர் சடலத்தை மீட்டனர்.
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கட்கிழமை காலை வரை தாங்கள் குடியிருக்கும் வீட்டையும், வளவையும் பேய்களின் தொல்லைகளிலிருந்து காப்பதற்காக பேய்களுக்கு கழிப்புச் சடங்கு செய்து காவல் பண்ணும் கிரியைகளில் ஈடுபட்டிருந்தார் என்று அவரது 29 வயதான மனைவி பிரியதர்ஷினி சாட்சியமளித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கணவர் உண்ணாமலும், உறங்காமலும் அவஸ்தைப்பட்டவர் என்றும், அதனால் வைத்தியர்கள் இவரை மனநல சிகிச்சை பெறுமாறு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் மனைவி தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)