09மாதங்களுக்கு முன் மரணமான பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு (மேலும் படங்கள் இணைப்பு)

(தனு)

மட்டக்களப்பில் கடந்த 9மாதங்களுக்கு முன்னர் மரணமான பெண் ஒருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வயிற்றுவலியினால் மட்டக்களப்பு கல்லடித்தெருவைச்சேர்ந்த ஜேசுதாசன் கோல்டன் பென்சமின் சாந்தி(வயது42)எனும் பெண் மரணமடைந்தார்.

இப் பெண்ணின் சடலம் 19.09.2012 அன்று மட்டக்களப்பு கல்லியன் காடு கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இப் பெண்ணின் மரணம் தொடர்பில் இவருடைய கணவர்; ஜேசுதாஸ் கோல்டன பென்சமின் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டு கடிதத்தினையடுத்து மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர்.

இதனை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இப் பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதியின் உத்தரவுக்கமைவாக சடலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தோண்டப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் இந்த பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிகளான டாக்டர் எம்.குணதிலக, மற்றும் டாக்டர் எம்.ஏ.அப்துர் றஹ்மான், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனுரத்த ஹக்மன பண்டார, மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவு பொறப்பதிகாரி ஐ.பி.சாந்தகுமார் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

இந்த பெண்ணின் சடலம் தோண்டும் போது அவரின் கணவர் ஜேசுதாஸ் கோல்டன் பென்சமின் மற்றும் அவரின் குடும்பத்தினரும் சமூகமளித்திருந்தனர்.இப் பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பொலிசாரினால் அம்பாறை  வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

குறித்த பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி வயிற்று வலியினால் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்பர் 17ம்திகதி மரணமடைந்தார்.

19ம் திகதி இவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இப் பெண்ணின் மரணம் தொடர்பில் இவரது கணவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு மகப்பேற்று வைத்தியர்களுக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.