13வது திருத்த சட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கதைப்பதற்கு அருகதையற்றது –பிரதியமைச்சர் முரளிதரன்

13வது திருத்த சட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கதைப்பதற்கு அருகதையற்றது.நான் இதன் அவசியம் குறித்து அரசாங்கத்திடம் தெளிவுபடுத்தியுள்ளேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

13வது திருத்த சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பகுதியில் இதுவரை மின்சாரம் அற்ற பகுதிக்கான மின் விநியோகத்தினை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மருங்கையடிபூவல் மற்றும் பிட்டியடித்துறை ஆகிய பகுதிகளுக்கான மின் இணைப்பானது சுமார் 40 இலட்சம் ரூபா செலவில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற பிரதேசமான இப்பிரதேச மக்கள் கடந்த காலத்தில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த மி;ன் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பிராந்திய மின்சாரசபை அத்தியட்சர் அனுசாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் நா.வில்வரெட்னம்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மின் விநியோக திட்டத்தின் மூலம் பிரதேசத்தில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய மின்சாரசபை அத்தியட்சர் அனுசாந்த் தெரிவித்தார்.