நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2027ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 வருட காலப்பகுதியில் குறித்த நகரங்களின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அடையாளம் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (31) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாநகர சபை, பிரதேச சபைகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, அபிவிருத்திக்கான முன்னுரிமைத் திட்டங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகளால் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.



