கடும் வறட்சியால் 7 மாவட்டங்களில் 1,15,534 பேர் பாதிப்பு - தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம்


நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

பாதிக்கப்பட்ட மக்களில் 34,608 குடும்பங்களைச் சேர்ந்த 113,354 பேருக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 34 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மொனராகலை மாவட்டமே வறட்சியால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாகும். அங்கு 8 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 12,732 குடும்பங்களில் 41,360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 20,418 பேருக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அம்பாறை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் இந்த வறட்சியான காலநிலை எல் நினோ காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்ற போதிலும், தற்போதைய வறட்சியின் தாக்கம் உடனடியாக முடிவுக்கு வரும் எனக் கூற முடியாது.

வளிமண்டலவியல் திணைக்கள முன்னறிவிப்பின்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்பட்டதுடன், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.