நாட்டின் பல கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் பலத்த கடல் சீற்றம் நிலவக்கூடும் என்பதால், மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (10) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை (11) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை செல்லுபடியாகும் எனக் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு 60 கி.மீ வேகத்தில் பலமாக வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் சீற்றமாகக் காணப்படும்.
எனவே, மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இக்கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை, காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையிலான கடற்பரப்புகள் மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையிலான கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இப்பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும், அடுத்தடுத்து வெளியாகும் வானிலை அறிக்கைகளைக் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
