நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) அறிவித்துள்ளது.
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளது.
இதில் ஜூலை மாதத்தில் மட்டும் வெள்ளிக்கிழமை (24) வரை 25,530 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை பதிவான தகவல்களின்படி, அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்திலேயே நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 17,135 நோயாளிகளும் கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளிகளும் மாத்தறை மாவட்டத்தில் 5,574 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியாகப் பார்க்கும் போது மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன:
இதன்படி, மேல் மாகாணத்தில் 42,835 நோயாளிகளும் தென் மாகாணத்தில் 12,260 நோயாளிகளும் மத்திய மாகாணத்தில் 6,924 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனச் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
