மண்முனை பாலத்திற்கு அருகில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை –பெருமளவான கசிப்பு மீட்பு

மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் முற்றுகையிட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை இன்று மாலை கைப்பற்றியுள்ளனர்.இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரள்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லிட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த தோனியும் போலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெலங்காவலகே  தலைமையிலான பொலீஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பறள்கள்,போத்தல்கள்,கலன்கள் என்பனவும் பொலீசாரினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையின்போது சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.