மட்டக்களப்பில் அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா!!


அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா மட்டக்களப்பில் இடம் பெற்றது.
அரச பதவி நிலை உத்தியோத்தர்களுக்கான 200 மணித்தியாலங்களை கொண்ட இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலை விழா நிகழ்வு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஜோசப் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில், சிறப்பு அதிதியாக நிலட் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் சந்திரகுமார் கலந்து சிறப்பித்துள்ளார்.
அதிதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது 200 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த பதவி நிலை உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்திருந்தன.
நாடளாவிய ரீதியில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட இக் கற்கைநெறியில் மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தில் மற்றும் வேறு மாவட்டங்களில் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் அரச பதவி நிலை உத்தியோகத்தர்களான அதிபர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள்,நில அளவையாளர்கள் , இக்கற்கைநெறியினை பூர்த்தி செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பயிற்சி நெறியின் வளவாளர்களான செல்வி.எம்.கே.திலினி மதுசிகா
மற்றும் திருமதி பி.ஜெனிடா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளதுடன், நிகழ்வின் இறுதியில் அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழி வாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையில் ஈடுபடும் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.