மட்டக்களப்பில் புதுவருடத்திலும் முகாம்களில் மக்கள் -நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுனர்


கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான் , வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாமிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முதளிதரன் தலைமையில் இடைத்தங்கள் முகாம்களான சித்தாண்டி விநாயகர் கிராம அலைமகள் வித்தியாலயம், வந்தாறுமூலை  கணேசா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டனர்.


இதன் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடி இடைத்தங்கள் முகாம்களையும் பார்வையிட்டு, இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

 இதன் போது இடைத்தங்கள் முகாமில்  தங்கியுள்ளவர்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஆளுனர் மற்றும் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் விஜயத்தின் போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் , ஏறாவூர்பற்று பிரதேச சபை செயளாலர் வ.பற்குணன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.