கையடக்க தொலைபேசி விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை!!


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை கருத்தில் கொண்டு, தற்போதைய கையடக்க தொலைபேசி விலைகளை 20 வீதத்தால் குறைக்க இலங்கை தொலைபேசி விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த மாதங்களில் கையடக்க தொலைபேசி கொள்வனவு 40 வீதத்தால் குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.

புதிய போன்களை வாங்காமல், பழைய போன்களை ரிப்பேர் செய்ய மக்கள் பழகிவிட்டனர் இவ்வாறு அவர் கூறினார்.

“இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்புடன் கைத்தொலைபேசிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

ஆனால் தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கையடக்கத் தொலைபேசிகளுக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், டொலர் விலை மீண்டும் அதிகரித்தால், கையடக்கத் தொலைபேசி விலைகளும் அதிகரிக்கும் என, தலைவர் தெரிவித்தார்.

“ஒரு நாடாக, ஒரு மொபைல் போன் அல்லது துணைக்கருவியின் உள்ளூர் உற்பத்தி இல்லை. ஒவ்வொரு பாகமும் சீனா, சிங்கப்பூர் அல்லது துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து இறக்குமதிகளும் அமெரிக்க டொலர் கொடுப்பனவுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.