அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைப்பு- சந்தேக நபரை அடையாளங்காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!!


அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளதுடன், குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த நீதிமன்ற கட்டிடத்தொகுதி சம்பவ தினமான கடந்த புதன்கிழமை (21) அதிகாலை 3 மணியளில் தீப்பற்றியதையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படையினர் தீயைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இருந்த போதும், கட்டிடத்திலுள்ள வழக்கு பதிவேட்டு அறை மற்றும் திறந்த நீதிமன்றம் உட்பட பல பிரிவுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா பதிவுகளில் 3 பேர் முகத்தை மூடியவாறு நீதிமன்ற வளாகத்தில் உள் நுழைந்து கட்டிடத்திற்கு தீ வைத்து விட்டு தப்பியோடும் காட்சி பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே வேளை, அக்கரைப்பற்று நீதிமன்றக்கட்டிடம் தீப்பற்றி எரிந்ததில் அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் எரிந்து அழிவடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

சம்பவ தினமன்று அதிகாலை 3.50 மணியளவில் கட்டிடம் தீப்பற்றியதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அக்கரைப்பற்று நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை முற்றாக எரிந்துள்ளதாகவும், அங்கிருந்த கோப்புகள் (Files) அனைத்தும் சாம்பலாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

சுமார் 16 ஆயிரம் கோப்புகள் இதன் காரணமாக எரிந்து சாம்பலாகியுள்ள என பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து கிடைத்த உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நீதிமன்ற விடுமுறைக்காலம் என்பதால், நீதிமன்றங்கள் சில நாட்களாக இயங்கவில்லை.

அக்கரைப்பற்று நீதிமன்றக்கட்டிடத்துக்கு அருகில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயமும், முன்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.