கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும்

 


வி.சுகிர்தகுமார் 

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார்.

இதேநேரம் கதிர்காமம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களின் கொடியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கூறப்பட்டது.
கடந்த இரு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த பாதயாத்திரை இவ்வருடம் இடம்பெறவுள்ளது.
 இந்நிலையில் யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்
லாகுல பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா தலைமையில் ஆலய வண்ணக்கர் எம்.டி.சுதுநிலமே பங்களிப்போடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்துருவான் அனுருத்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உஷா பெரேரா மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் இராணுவ உயர் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பாணமை விகாராதிபதி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP.க.கு.சீதாராம குருக்கள் உதவிக்குரு சிவஸ்ரீ ஆ.கோபிநாத் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம குருக்கள் நடாத்தி வைத்தார். இதில் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னராக ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டடன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் தொடர்பில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ் சிங்கள மொழியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன் தமிழ்மொழியில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசனும் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீP.க.கு.சீதாராம் அவர்களும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
கதிர்காம பாதயாத்திரைக்கான குமண ஊடான காட்டுவழிப்பாதை இம்மாதம் 22ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
அதுபோல் பாதயாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு சுகாதார சேவைகள்  குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றனர்.
மேலும் பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள உதவிகளை பாதயாத்திரிகள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேநேரம் இம்முறை மேற்கொள்ளப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும் எரிபொருள் பிரச்சினை பாரிய தாக்கத்தினை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.