மட்டக்களப்பு மாநகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கருவேப்பங்கேணி பொதுச் சந்தையானது மக்கள் பாவனைக்காக நேற்றைய தினம் கையளிக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ உறுப்பினராக இருந்து அமரத்துவமடைந்த திரு.வே.தவராஜா அவர்களின் முன்மொழிவுக்கு அமைவாக சபையின் அங்கீகாரத்துடன் குறித்த சந்தையானது நிர்மாணிக்கப்பட்டு பொது மக்களினதும், வியாபாரிகளினதும் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் திரு.நாகராஜா மதிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாநகர சபையின் கௌரவ முதல்வர் திரு. தியாகராஜா சரவணபவன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததோடு, விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் தற்போதைய சிரேஷ்ட உதவிச் செயலாளருமான திரு. கா.சித்திரவேல் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் கெளரவ பிரதி முதல்வர் திரு.க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் கெளரவ உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
மேற்படி பொதுச் சந்தை தொகுதியானது இறைச்சி விற்பனை கடைகள், மரக்கறி மற்றும் மீன் விற்பனை பகுதிகளை உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த திறப்பு விழா நிகழ்வில் கருவேப்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், வியாபாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
