10 கிலோ அரிசி பையை சைக்கிளில் இருந்த நிலையில், சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்று திரும்பிய போது, அரிசி பை திருட்டு போன சம்பவமொன்று வலஸ்முல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இல்லாத காரணத்தால், போக்குவரத்துக்கு சைக்கிளை பயன்படுத்திவந்தார்.
சமீபத்தில் நகருக்கு அவர் சைக்கிளில் வந்த போது, 10 கிலோ அரிசியை கொள்வனவு செய்து, தனது சைக்கிளின் லக்கேஜில் வைத்துக் கட்டியுள்ளார். மேலும் சில பொருட்களை வாங்கி சைக்கிளின் கைப்பிடியில் தொங்க விட்டுள்ளார்.
பின்னர் முட்டை வாங்குவதற்காக சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குச்சென்று திரும்பிவந்து பார்த்தபோது சைக்கிளின் லக்கேஜில் கட்டப்பட்டிருந்த அரிசிப் பை காணாமல் போயிருந்தது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது என அறிந்து கொண்ட அந்த நபர், மீண்டும் கடைக்குச் சென்று 10 கிலோ அரிசிப் பையை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.