கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

காளி கோயில் வீதி கதிரவெளியை சேர்ந்த ஜீவானந்தம் விமல்ராஜ் (வயது 22) வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த புலேந்திரன் அனுஷ்காந் (வயது 23), புதூர் கதிரவெளியைச் சேர்ந்த தங்கவேல் சஜிதன் (வயது 26) ஆகிய மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கதிரவெளி கடலில் குளிப்பதற்கு நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு இளைஞர் நீந்தி கரை சேர்ந்து உள்ளதாகவும் தெரியவருகிறது.

உயிரிழந்த இளைஞர்களின் சடலம் கதிரவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மரணச் சம்பவம் தொடர்பில் கதிரவெளி பிரதேசம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.