மண்முனைப்பற்றின் 2022 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட விளையாட்டு விழா!!


மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களமும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்றின் 2022 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட விளையாட்டு விழா நேற்று முன்தினம் (31) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரதேச மட்ட விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி த.பிரபாசங்கர் மற்றும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ஏ.ஆதாம்லெவ்வை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

குறித்த விளையாட்டு விழாவில் புள்ளிகளின் அடிப்படையில் சுடர் விளையாட்டு கழகம் 14 தங்கப்பதக்கங்களையும், 9 வெள்ளிப்பதக்கங்களையும், 8 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று முதலாம் இடத்தினையும், விஸ்வகலா விளையாட்டுக்கழகம் 12 தங்கப்பதக்கங்களையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் 4 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று இரண்டாம் இடத்தினையும், 6 தங்கப்பதக்கங்களையும் 10 வெள்ளிப்பதக்கங்களையும் 12 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று டெல்பின் விளையாட்டு கழகம் மூன்றாம் இடத்தினையும் சுவீகரித்திருந்தது.

இதன்போது அலுவலக உத்தியோகத்தர்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன், மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கான சிறப்பு விருதுகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.வி.லோகினி, பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திவாகரன், விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலக பதவி நிலை உத்யோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச விளையாட்டு கழகங்களின் வீரர்கள் அடங்கலாக கிராம மக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.