செணெஹே தடாக" வீட்டை அடிப்படையாகக் கொண்ட பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!!


"செணெஹே தடாக" வீட்டை அடிப்படையாகக் கொண்ட பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று நேற்று (28) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் தொடர்பான தெளிவுபடுத்தலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கான சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி க. அருளானந்தம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்கான விரிவுரையாளர் வைத்திய கலாநிதி வ.மயூரன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வீ.முரளிதரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் யோ.தனுசியா உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியில் பெற்றோர்களின் வகிபாகம் தொடர்பாக வைத்திய கலாநிதி க அருளானந்தம் அவர்களினால் பெற்றோர்களுக்கான விரிவுரையாற்றப்பட்டதுடன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியில் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக வைத்திய கலாநிதி வ.மயூரன் விரிவுரையாற்றியிருந்தார்.

அத்தோடு முன்பள்ளைப்பருவ அபிவிருத்தியின் முக்கியத்துவம், முன் பிள்ளைப்படுவ அபிவிருத்தியில் அழகியல் செயற்பாட்டின் முக்கியத்துவம் போன்ற விடையங்கள் தொடர்பாகவும் இதன்போது வளவாளர்களினால் பெற்றோர்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.