பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க கோரும் கையெழுத்து போராட்டமானது இன்றைய தினம் (01.03.2021) மட்டக்களப்பு வவுனாதீவு பிரதேசத்கில் பொலிஸ் கெடுபிடிகளையும் தாண்டி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க கோரி இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினரால் தற்போது நாடுபூராகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (01.03.2021) வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரனின் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராசாவின் தலைமையில் வவுணதீவு பொது சந்தைக்கு முன்னால் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஞா ,ஸ்ரீ நேசன், மன்முனை மேற்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பொ.செல்லத்துரை (கேசவன்) உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வவுணதீவு பொலிஸார் நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்திருந்ததுடன், அனுமதி பெறப்படாது நிகழ்வினை நடத்துவதாலும், கொரொனா தொற்று பரவலுக்கான சாத்திகக் கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்து நிகழ்வினை நடாத்த முடியாது என
தெரிவித்ததுடன், அங்கு வந்திருந்தவர்களையும் கலைந்து செல்லுமாறும் உத்தரவிட்டனர், இதனை தொடர்ந்து இந் நிகழ்வானது வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டதுடன் அங்கிருந்து கையெழுத்து சேகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.