மட்டக்களப்புக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு –மட்டக்களப்பின் பிரபல தொழிலதிபர் மரணம்

மட்டக்களப்பு பிள்ளையாரடி விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆலயம் மற்றும் கள்ளியங்காடு ஆதி ஆஞ்சநேயர் ஆலயங்களின் ஸ்தாபகத் தலைவரும் ஆன்மீக, சமூகசேவையாளரும் வர்த்தகருமான இராசதுரை சண்முகராஜா தனது 70 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை (15) காலமானார்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தனியார் மருத்தவ மனையில் சிறுநீரக மாற்றுச் சிகிட்டை பெற்று வந்த நிலையில் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.

மட்டக்களப்பு பயனியர் வீதி ஆஞ்சநேயர் ஹாட்வெயார் மற்றும் ஆஞ்சநேயர் குறூப் ஒவ் கொம்பனி உரிமையாளராகவும் மட்டக்களப்பு மாமாங்கம் ஸ்ரீ விக்கினேஸ்வரர் திருத்தொண்டர் சபையின் தலைவராக விருந்து ஆன்மீக கலை கலாசார மேம்பாட்டிற்கு பணியாற்றியவர்.

அரச ஒப்பந்தக்காரராகவிருந்து கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளிட்ட பல்வேறு பாரிய கட்டிடங்களை அமைத்து சிறந்த ஒப்பந்தக்காரருக்கான விருதுகளைப் பெற்றவர்.

கள்ளியங்காட்டில் ஆஞ்சநேயர் ஆடைத்தொழிற்சாலையொன்றை நிறுவி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த தொழில்  வழங்குனராகவும்  சிறுவர்கள் மற்றும் பெற்றோர் மன அழுத்தம் கவலை மற்றும் மனச்சோர்வினால் பாதிக்கப்படும்போது அவற்றை போக்குவதற்காக கள்ளியங்காட்டில் நவீன தொழில்நுட்பத்துடனான சிறுவர் உலகம் எனும் விளையாட்டு வளாகம் ஒன்றை நிறுவியுள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள்  நாளை  (17) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 3.00 மணிக்கு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.