மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி எதிர்நோக்கும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களது பங்களிப்பைச் செய்துவருகின்றனர்.
அதற்கமைவாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அலுவலக உத்தியோகத்தர்களினால் அலுவலக உத்தியோகத்தர்களின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டும் மூன்றாவது தடவையாக இரத்ததான முகாமினை நடாத்தியுள்ளனர்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான இரத்ததான முகாமானது இன்று (18) திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளரும் நலன்புரிச்சங்க தலைவருமான வீ.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியினை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக செய்துவந்த நிலையில் கொவிட் 19 சூழ்நிலை காரணமாக கடந்த வருடம் இரத்ததான முகாமினை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இன்று இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்தக் கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.