மனைவியின் கத்தி குத்து தாக்குதலில் கணவன் பலி...!!


நவகமுவ– ரணால பிரதேசத்தில் மனைவியின் கத்திக் குத்துக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (07) செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் தனது மனைவியின் தலையில் தேங்காய் ஒன்றால் கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து மனைவி கையிலிருந்த கத்தியால் கணவனின் கழுத்து பகுதியை தாக்கியுள்ளார் என விசாரணைகளில் தெரிய வருகிறது.

படுகாயமடைந்த இருவரும் அயலவர்களால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எனினும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 50 வயதுடைய மொரகெட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

நவகமுவ பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.